முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு - முடிவானது ரன்பீர், ஆலியா பட் திருமண தேதி

By செய்திப்பிரிவு

ஆலியா பட், ரன்பீர் கபூர் திருமணம் இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளது.

2018-ம் ஆண்டிலிருந்து ஆலியாவும், ரன்பீரும் காதலித்து வருகின்றனர். இருவரும் ஒன்றாக ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அதைத் தாண்டி இருவரையும் பொது இடங்களில் ஒன்றாகப் பார்ப்பது அரிதே. கரோனா ஊரடங்கு சமயத்தின் போது இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்தனர். இதன்பின் இருவரும் குடும்ப மற்றும் பொது நிகழ்வுகளில் ஒன்றாக கலந்துகொண்டு தங்கள் காதலை வெளிப்படுத்தினர்.

இவர்களின் ஐந்து வருடக் காதல் இப்போது அடுத்தகட்டத்துக்கு செல்லவுள்ளது. ஆம், இருவரும் திருமணம் செய்யவுள்ளனர். இவர்களின் திருமணம் குறித்த செய்தி தான் கடந்த சில நாட்களாக பாலிவுட் வட்டாரங்களில் பேசுபொருளாக இருந்தன. திருமண தேதி மற்றும் பிற விவரங்கள் எதுவும் பொதுவெளியில் வெளியாகாமல் இருந்தது வந்தது. இந்தநிலையில் அதன் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஆலியாவின் உறவினர் ஒருவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி ஆலியா மற்றும் ரன்பீர் ஏப்ரல் 14ம் தேதி திருமணம் செய்யவுள்ளது உறுதியாகியுள்ளது. திருமண விழா மொத்தம் நான்கு நாட்கள் நடக்கவுள்ளது என்றும் ஏப்ரல் 13ம் தேதி மெஹந்தி விழாவுடன் தொடங்கும் என்றும் அந்த உறவினர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

இதனிடையே, திருமணத்தில் திருமண விருந்தினர் பட்டியலில் கரண் ஜோஹர், ஷாருக்கான், சஞ்சய் லீலா பன்சாலி, அகன்ஷா ரஞ்சன், அனுஷ்கா ரஞ்சன், ரோஹித் தவான், வருண் தவான், ஜோயா அக்தர் உள்ளிட்ட ஒரு சில பிரபலங்கள் மட்டுமே கலந்துகொள்ளவுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE