‘பிர்சா’ - உறுதியானது பா.இரஞ்சித் இயக்கும் இந்திப் பட ஒப்பந்தம் 

By செய்திப்பிரிவு

‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தைத் தொடர்ந்து ‘பிர்சா’ என்னும் இந்திப் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, துஷாரா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சார்பட்டா பரம்பரை'. ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இதன் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரிகிருஷ்ணன், ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தைத் தொடர்ந்து இந்திப் படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் பா.இரஞ்சித். ‘சார்பட்டா பரம்பரை’ படத்துக்கு முன்னதாக ‘பிர்சா முண்டா’ என்ற இந்திப் படத்தை இயக்க இருந்தார் பா.இரஞ்சித். பல்வேறு காரணங்களால் அந்தப் படத்தின் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன.

தற்போது அந்தப் படத்தைதான் மீண்டும் இயக்கவுள்ளார் பா.இரஞ்சித். ஜார்க்கண்ட் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கைக் கதை இதுவாகும். இந்தப் படத்தை நமாஹ் பிக்சர்ஸ் சார்பில் ஷரீன் மன்த்ரி, கிஷோர் அரோரோ ஆகியோர் தயாரிக்கிறார்கள். ‘பிர்சா’ என்ற தலைப்பில் இந்தப் படம் தற்போது தயாராகிறது. இதில் நாயகனாக யார் நடிக்கிறார் என்பது விரைவில் தெரியவரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE