நடிகை ஸ்வரா பாஸ்கருக்கு கரோனா தொற்று உறுதி 

By செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 3-வது அலை தொடங்கிவிட்டதால், மக்கள் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், முகக்கவசம் அணிவதை நிறுத்தக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநில அரசுகளும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கரோனா வைரஸின் உருமாற்ற டெல்டா வைரஸ் பரவுவதோடு, ஒமைக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது.

திரையுலக பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், நடிகை மீனா உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜன.5 அன்று எனக்கு அறிகுறிகள் ஏற்பட்டன. பரிசோதனை முடிவுகளும் அதனை உறுதி செய்துள்ளன. 5ஆம் தேதி மாலை முதல் நானும் என் குடும்பத்தினரும் எங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நான் எடுத்துக் கொண்டேன். இந்த வாரம் நான் சந்தித்த அனைவரிடமும் இந்தத் தகவலைச் சொல்லிவிட்டேன். ஆனால், என்னுடன் யாராவது தொடர்பில் இருந்திருந்தால் தயவுசெய்து அவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ளவும்''.

இவ்வாறு ஸ்வரா பாஸ்கர் கூறியுள்ளார்.

மேலும் அப்பதிவில் தனக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளதாகவும், தான் சுவையை உணரும் திறனை இழந்துவிட்டதாகவும் ஸ்வரா பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE