வாரிசு அரசியலை எதிர்த்துவிட்டு வாரிசுகளின் பின்னாலேயே ஓடுவார்கள்: நடிகை ரிச்சா சாடல் பதிவு

பாலிவுட்டில் வாரிசுகளுக்கு முன்னுரிமை தரும் வாரிசு அரசியலை எதிர்த்துப் பேசும் பத்திரிகையாளர்கள் அதே வாரிசுகளின் பின்னால் செய்திகளுக்காக ஓடுகிறார்கள் என்று நடிகை ரிச்சா சட்டா கூறியுள்ளார்.

கருத்துகளை வெளிப்படையாகப் பேசுவதற்கு பெயர் பெற்றவர் நடிகை ரிச்சா சட்டா. இணையவெளியில் தேவையில்லாம கிண்டல் செய்பவர்கள், சர்ச்சைக்குரிய வகையில் பேசும் சக கலைஞர்கள் என ரிச்சா சட்டா பல விஷயங்கள் குறித்து விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பகுதியில் பதிவொன்றை ரிச்சா வெளியிட்டிருந்தார். இதில் "பாலிவுட் என்பது பாந்த்ரா பகுதிக்கும் கூர்கான் பகுதிக்கும் இடையே இருக்கும் ஒரு கற்பனையான விலாசம் மட்டுமே. உங்களுக்கு, உங்கள் ஆரோக்கியத்துக்கு, உங்கள் தொழிலுக்கு பாதகமான ஒன்றை நீங்கள் செய்ய வேண்டும் என்று இங்கிருப்பவர்கள் விரும்பினால், அது நமக்கு எவ்வளவு நல்லது, தைரியமாக இருக்கு என்று ஊக்கம் தந்து நம்மை நம்ப வைப்பார்கள். எதுவும் தெரியாத வெள்ளந்தியாக இருந்த சமயத்தில் நான் இப்படியானவர்களை நம்பியிருக்கிறேன்.

பத்திரிகைத் துறையைச் சேர்ந்தவர்கள் சிலர் வாரிசு அரசியல் எப்படி பாலிவுட்டை அழித்து வருகிறது என்று நீண்ட கட்டுரைகளை எழுதுவார்கள். அதேசயம் உரிய வயதைக் கூட எட்டாத வாரிசுகளை ஒவ்வொரு இடத்துக்கும் ரகசியமாகத் தொடர்வார்கள். தானாக முயன்று முன்னேறுபவர்களை தங்களது சுமாரான எழுத்தில், பேச்சு சுதந்திரம் என்று கூறிக்கொண்டு, தூற்றுவார்கள்.

ஓடிடி, விஆர் மற்றும் எதிர்கால மாற்றங்களைத் தாக்குப் பிடிக்க வேண்டுமென்றால் இவர்களெல்லாம் சீக்கிரம் மாற வேண்டும். மாற்றம் வந்து கொண்டிருக்கிறது பாருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE