நமது நாட்டின் முதுகெலும்பே சிறு வியாபாரிகள்தான்: சோனு சூட்

By ஐஏஎன்எஸ்

சிறு வியாபாரங்களும், வியாபாரிகளும்தான் நமது நாட்டின் முதுகெலும்பு என்று நடிகர் சோனு சூட் பேசியுள்ளார்.

கடந்த சில வாரங்களாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறு வியாபாரிகளை ஆதரிக்க வேண்டும் என்று ஹேஷ்டேக் போட்டு பிரச்சாரம் செய்து வருகிறார் நடிகர் சோனு சூட். சிறு வியாபாரிகளுடன் உரையாடுவது, அவர்களோடு சேர்ந்து தாபாவில் சப்பாத்தி போடுவது, பால் விற்பது எனச் செய்து வருகிறார். உள்ளூரில் இருக்கும் வியாபாரிகளுக்கு ஆதரவு கொடுங்கள் என்று மக்களைக் கேட்டு வருகிறார்.

இதுகுறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய சோனு சூட், "சிறு வியாபாரங்கள்தான் நம் நாட்டின் முதுகெலும்பு. அவர்களுக்கு ஆதரவு தேவை என்பதால்தான் என்றுமே நான் அவர்களை ஆதரித்து வருகிறேன். தினசரி வாழ்வாதாரத்தைக் காக்கவே பல சிறு வியாபாரிகள் கஷ்டப்படுகின்றனர். ஒருவர் தனது கடின உழைப்பைப் போட்டு, நேர்மையாகப் பிழைக்க வேண்டும் என்று முயல்வதைப் பார்க்கும் போதெல்லாம் நான் அவர்களுக்கு உதவ முயன்றேன்.

நான் ஒரு சிற்றூரிலிருந்து வருகிறேன். இந்த சின்ன வியாபாரம் வெற்றிகரமாக இருக்க இந்த மக்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களை உந்தித் தள்ளுவதால் நம் நாட்டின் பொருளாதாரம் முன்னேற நாம் உதவலாம். ஏனென்றால் இந்தச் சிறு குறு வியாபாரங்கள்தான் நமது நாட்டின் கிராமப்புறங்களின் நிறுவனங்கள். எனவே அவர்களுக்கு உதவுவது என்றுமே நல்ல உணர்வைத் தரும்" என்று சோனு சூட் பேசியுள்ளார்.

கரோனா ஊரடங்கு ஆரம்பித்த நாளிலிருந்து தான் செய்து வரும் பலவிதமான உதவிகளுக்காக பிரபலமானார் நடிகர் சோனு சூட். ஊரடங்கால் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் இருந்த தொழிலாளர்களுக்குப் போக்குவரத்து ஏற்பாடு செய்ததிலிருந்து, வெளிநாட்டில் சிக்கிய மாணவர்களை விமானம் மூலம் இந்திய கொண்டுவந்து சேர்த்தது, கல்வி உதவி, வேலைவாய்ப்பு உதவி, ஆக்சிஜன் சிலிண்டர் அமைக்க உதவி என எக்கச்சக்கமான உதவிகளைச் செய்து மக்களின் அபிமானத்தைப் பெற்றுள்ளார் சோனு சூட்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE