நடிகர் சல்மான் கானுக்குத் திருமணமாகி 17 வயதில் மகள் இருப்பதாகவும், மனைவியும், மகளும் துபாயில் இருப்பதாகவும் கருத்துப் பதிவிட்ட ஒருவருக்கு சல்மான் கானே பதிலளித்துள்ளார்.
பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் சல்மான் கான். இவரது சகோதரர் அர்பாஸ் கான், 'குயிக் ஹீல் பின்ச் பை அர்பாஸ் கான்' என்கிற நிகழ்ச்சியை ஒரு யூடியூப் சேனலுக்காகத் தொகுத்து வழங்குகிறார். 2019ஆம் ஆண்டு இதன் முதல் சீஸன் வெளியானது. தற்போது இரண்டாவது சீஸன் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு முதல் பகுதியுடன் தொடங்கியது.
இதில் சிறப்பு விருந்தினராக சல்மான் கான் கலந்துகொண்டார். இணையத்தில் மற்றவர்களை அவதூறு பேசி துன்புறுத்துபவர்கள் குறித்தும், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். அப்படி சல்மான் கான் குறித்து அவதூறாகப் பதிவிடப்பட்டுள்ள கருத்துகள் சிலவற்றைப் பற்றி அர்பாஸ் கான் இந்த நிகழ்ச்சியில் அவரிடம் கேட்டார்.
இதில் ஒரு கருத்தில், “எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள், கோழையே. நீங்கள் துபாயில் மனைவி மற்றும் 17 வயது மகளுடன் இருக்கிறீர்கள் என்று இந்தியா முழுவதும் தெரியும். இன்னும் எவ்வளவு நாட்கள் எங்களை ஏமாற்றுவீர்கள்?” என்று பகிர்ந்திருந்தார்.
» ரம்யா கிருஷ்ணனால் வெளியேற்றமா? நடந்தது என்ன?- வனிதா விஜயகுமார் விளக்கம்
» இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டிய 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா' தமிழ் ரீமேக்
இந்தக் கருத்து குறித்து சல்மான் கான் பேசுகையில், "இதெல்லாம் அபத்தமாக இருக்கிறது. இவருக்கு பதில் சொல்வதன் மூலமாக கண்ணியம் காட்டப்போகிறேன் என்று இந்த நபர் எதிர்பார்க்கிறாரோ? சகோதரா, எனக்கு மனைவி கிடையாது. நான் இந்தியாவில் வாழ்கிறேன். 9 வயதிலிருந்து கேலக்ஸி அபார்ட்மென்ட்ஸில் தான் வசிக்கிறேன். இந்தியா முழுவதும் இது தெரியும். எனவே இந்த நபருக்கெல்லாம் பதில் சொல்லப்போவதில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.