அஜய் தேவ்கன் தயாரிப்பில் இந்தியில் ரீமேக் ஆகும் நாந்தி

By செய்திப்பிரிவு

தெலுங்கில் விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டைப் பெற்ற 'நாந்தி' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கை அஜய் தேவ்கன் இணைந்து தயாரிக்கவுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் 'நாந்தி'. அறிமுக இயக்குநர் விஜய் கனகமெடலா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் அல்லரி நரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கொலை வழக்கில் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குச் செல்லும் ஐடி ஊழியருக்கு நேரும் அவலங்களே இந்தக் கதை.

விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் வசூல் ரீதியாகவும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. தற்போது இதன் இந்தி ரீமேக்கை நடிகர் அஜய் தேவ்கனும், தெலுங்குத் திரையுலகில் முன்னணித் தயாரிப்பாளரான தில் ராஜுவும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அஜய் தேவ்கன், "ஒரு முக்கியமான கதையை உங்களோடு பகிர்வதற்கான நேரம் இது. நானும், தில் ராஜுவும் இணைந்து, தெலுங்கில் வெற்றி பெற்ற 'நாந்தி' படத்தை இந்தியில் தயாரிக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த ரீமேக்கை யார் இயக்குவார், யார் இதில் நடிப்பார்கள் என்பன உள்ளிட்ட விவரங்கள் இன்னும் இறுதியாகவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE