கவுன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியின் 13-வது சீஸனை நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்க இருக்கிறார். இதுகுறித்த தகவலை சோனி டிவி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் அடிப்படையில் உருவான நிகழ்ச்சியே கவுன் பனேகா க்ரோர்பதி. தமிழிலும் கோடீஸ்வரன் என்கிற பெயரில் ஒளிபரப்பானது. ஆனால், இந்தி அளவுக்கு பெரிய வெற்றி பெறவில்லை. இந்தி வடிவத்தின் தொகுப்பாளர் அமிதாப் பச்சன் நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருப்பவர்.
2000ஆம் ஆண்டு ஒளிபரப்பை ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி தற்போது 21 வருடங்கள் கடந்து 13-வது சீஸனில் இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்நிகழ்ச்சியின் 12-வது சீஸனுக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டதால்தான் அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது.
தனக்கு குணமான உடனேயே அமிதாப் பச்சன், பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். 13-வது சீஸன் அறிவிப்பை ஒரு காணொலி டீஸராக சோனி டிவி எண்டர்டெய்ன்மெண்ட் வெளியிட்டுள்ளது. மே 10 முதல் நிகழ்ச்சிக்கான பதிவு தொடங்கவுள்ளதாக இந்த டீஸரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர 'ஜுந்த்', 'ப்ரம்மாஸ்திரா', 'குட்பை', 'மே டே' உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார்.