கரோனா பாதிப்பு: பிரபல இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோட் மரணம்

By செய்திப்பிரிவு

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோட் கரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு வயது 66.

90களில் இந்திய சினிமாவின் முக்கிய இசை இரட்டையர்களாக இருந்தவர்கள் நதீம் சைஃபி மற்றும் ஷ்ரவன் ரத்தோட். நதிம் - ஷ்ரவன் என்று அழைக்கப்பட்ட இவர்கள் ஆஷிக்கி (1990), சாஜன் (1991), பர்தேஸ் (1997), ராஜா ஹிந்துஸ்தானி (1996) உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைத்திருத்திருந்தனர். இவர்களது இசையில் உருவான ‘பர்தேஸி பர்தேஸி’, ‘தோ தில் மில் ரஹி ஹே’ உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் பிரபலம். 2000ஆம் ஆண்டு உடைந்த இவர்களது கூட்டணி மீண்டும் 2009ஆம் ஆண்டு ‘டு நாட் டிஸ்டர்ப்’ படத்தின் மூலம் ஒன்றிணைந்தது.

இந்நிலையில் இவர்களில் ஒருவரான ஷ்ரவன் ரத்தோட் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த திங்கள் (ஏப்.19) அன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ஷ்ரவன் ரத்தோட் நேற்று இரவு (ஏப்.22) உயிரிழந்தார். இதை அவரது மகன் சஞ்சீவ் ரத்தோட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஷ்ரவன் ரத்தோட் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE