தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ஆலியா பட்

நடிகை ஆலியா பட் சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் ஆலியா பட். பிரபல பாலிவுட் இயக்குநரான மகேஷ் பட்டின் மகளான இவர் 2012ஆம் ஆண்டு கரண் ஜோஹர் இயக்கத்தில் வெளியான ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதன் பிறகு 2014ஆம் ஆண்டு இம்தியாஸ் அலி இயக்கத்தில் வெளியான ‘ஹைவே’ படம் மூலம் ஆலியா பட்டின் பெயர் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.

அதனைத் தொடர்ந்து ‘2 ஸ்டேட்ஸ்’, ‘உட்டா பஞ்சாப்’, ‘டியர் ஜிந்தகி’ உள்ளிட்ட படங்களின் மூலம் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ஆலியா பட்.

கடந்த ஆண்டு நடிகர் சுஷாந்த் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் எழுந்த வாரிசு அரசியல் சர்ச்சையில் ஆலியா பட் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவரது நடிப்பில் வெளியான ‘சடக் 2’ இணையத்தில் கடும் எதிர்வினைகளைச் சந்தித்தது.

இந்நிலையில் நேற்று ஆலியா, தனது புதிய தயாரிப்பு நிறுவனம் குறித்த அறிவிப்பை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

''இந்த அறிவிப்பை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். எடர்னல் சன்ஷைன் புரொடக்‌ஷன்ஸ்! இனி நாங்கள் கதைகள் சொல்ல இருக்கிறோம். மகிழ்ச்சியான கதைகள், மனதுக்கு இதமான கதைகள், உண்மைக் கதைகள், காலத்தால் அழியாத கதைகள்''.

இவ்வாறு ஆலியா பட் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE