கரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக அளவில் பெரும்பாலானவர்கள் வீடுகளில் முடங்கியுள்ள வேளையில், தொலைக்காட்சி, கணினியைத் தாண்டி நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களின் மூலம் புதிய திரைப்படங்கள், தொடர்களைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே நெட்ஃப்ளிக்ஸில் புதிதாக 1 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். இதனால் கரோனாவுக்கு முன் எடுக்கப்பட்ட பல்வேறு திரைப்படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழில் ‘சூரரைப் போற்று’, இந்தியில் ‘லக்ஷ்மி பாம்’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட் திரைப்படங்களும் ஓடிடி வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன.
இந்நிலையில் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப்சீரிஸ்களில் நடிக்கும் நடிகர்கள் புதிய வரலாற்றைப் படைப்பதாக பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஷேகர் கபூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
» புதிய பட அறிவிப்பு: சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளான அர்ஜுன் கபூர்
» 'சூரரைப் போற்று' தொடர்பாக யார், யாரிடம் பேசுவது என்ற குழப்பமான சூழல்: ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்
''திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் அனைவரும் ஆன்லைனில் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்களைப் பார்த்து வருகின்றனர். ஓடிடி தளங்களின் முலம் பல திறமையான நடிகர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் ஒரு புது வரலாற்றைப் படைக்கின்றனர்''.
இவ்வாறு ஷேகர் கபூர் கூறியுள்ளார்.
அவரது இந்தப் பதிவில் பயனர் ஒருவர், ‘ஏன் நீங்கள் தற்போது படங்கள் தயாரிப்பதில்லை?’ என்று கேள்வியெழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்துள்ள ஷேகர் கபூர், ''ஏனெனில் திரைப்படங்கள் என்பது ஆக்கபூர்வமானவற்றை வெளிப்படுத்திய காலங்கள்போய் தற்போது அவை வெறும் வியாபாரம் மட்டுமே என்றாகிவிட்டது'' என்று கூறியுள்ளார்.