ஹரியாணா மாநிலத்தில் உள்ளது மோர்னி என்ற கிராமம். இங்குள்ள அரசு பள்ளி மாணவர்கள் பெரும்பாலோரிடம் ஆன் லைன் வகுப்பில் கலந்து கொள்வதற்கு வசதியாக ஸ்மார்ட் போன்கள் இல்லை. இதற்காக, ஸ்மார்ட் போன் வைத்துள்ள பிற மாணவர்கள் வீட்டுக்குச் சென்று ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டனர். இதற்காக மாணவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலையில் இருந்தனர்.
இந்த செய்தி நேற்று முன்தினம் நாளிதழ் ஒன்றில் வெளியானது. இதைப் பார்த்த இந்தி நடிகர் சோனு சூட், நேற்று முன்தினம் தனது ட்விட்டரில், ‘‘இனி அந்த மாணவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் அலைய வேண்டி இருக்காது. அவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் கிடைத்துவிடும்’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சோனு சூட்டின் நண்பர் கரண் கிலோட்ரா என்பவர் ஸ்மார்ட் போன்களை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் நேற்று காலை வழங்கினார். அந்த செல்போன்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. ஸ்மார்ட் போன்கள் மூலம் சோனு சூட்டுடன் மாணவர்கள் காணொலிக் காட்சி மூலம் பேசி நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சோனு சூட், ‘‘ஹரியாணா பள்ளி மாணவர்கள் தங்களது ஸ்மார்ட் போன்களுடன் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டதை பார்க்கும் அற்புதமான நாளாக இன்று தொடங்கியது. மாணவர்களுக்கு உதவ வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்று பதிவிட்டுள்ளார்.