நடிகர் சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

கடும் மூச்சுத் திணறல் காரணமாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (09.08.20) மாலை நடிகர் சஞ்சய் தத்துக்கு கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதியானது. பின்னர் அவர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பலரும் சஞ்சய் தத் விரைவில் குணமடைய வேண்டி சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து சஞ்சய் தத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நான் நன்றாக இருக்கிறேன் என்பதை அனைவரிடமும் உறுதி செய்வதற்காகவே இந்த பதிவு. நான் தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறேன். எனக்கு கரோனா தொற்று இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். லீலாவதி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் ஆகியோரின் உதவியால் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்பிவிடுவேன். உங்கள் வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE