வாஜித்தை இழந்தது என் இதயத்தின் ஒரு பகுதியை இழந்ததைப் போல உள்ளது: சாஜித் கான்

சகோதரர் வாஜித் கானை இழந்தது தன் இதயத்தின் ஒரு பகுதியை இழந்ததைப் போல உள்ளது என இசையமைப்பாளர் சாஜித் கான் கூறியுள்ளார்.

1998-ம் ஆண்டு சல்மான்கான் நடித்த ‘பியார் கியா தோ தர்ணா க்யா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் இசையமைப்பாளர்களாக அறிமுகமான சாஜித்- வாஜித் சகோதரர்கள் அதன்பிறகு சல்மான்கானின் ஆஸ்தான இசையமைப்பாளர்களாக விளங்கினர். சமீபத்தில் வெளியான ‘ப்யார் கரோனா’ ‘பாய் பாய்’ ஆகிய சல்மான்கானின் இரு ஆல்பங்களுக்கு இசையமைத்திருந்தனர். வாஜித் கான் ஜூன் 1 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். தற்போது தனது சகோதரர் மரணம் குறித்து சாஜித் பேசியுள்ளார்.

"இது எங்களுக்கு மிகவும் கடினமான காலகட்டம். மிகவும் கனிவான, தாராள மனம் கொண்டவர்களில் ஒருவராக வாஜித் இருந்தார். நாங்கள் என்றும் நினைவில் வைத்திருக்கும் ஒரு விஷயம், அவரது சிரிப்பு, வாழ்க்கையை அவர் அணுகிய விதம், அதுதான் எங்கள் இசைக்கு ஜீவனைக் கொடுத்தது. இது என் இதயத்தில் ஒரு பகுதியை இழந்தது போல உள்ளது. ஆனால் நான் முன்னமே சொன்னதைப் போல என் சகோதரன் ஒரு சகாப்தம். சகாப்தங்கள் மறைவதில்லை" என்று சாஜித் கூறியுள்ளார்.

கடைசியாக சகோதரர்கள் இருவரும் சேர்ந்து எம்.எக்ஸ்.ப்ளேயரின் டைம்ஸ் ஆஃப் மியூஸிக் என்ற நிகழ்ச்சியில் பிரபலமான பழைய பாடல் ஒன்றை உருவாக்கியிருந்தனர். இந்த நிகழ்ச்சி இன்னும் வெளியாகவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE