மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள் வாக்களிப்பு

பாலிவுட் திரை நட்சத்திரங்கள் ரேகா, வித்யா பாலன், ஆமிர் கான், சோனம் கபூர் உள்ளிட்டோர் மும்பையில் வாக்களித்தனர்.

நடிகை வித்யாபாலன் மும்பை யின் ஜுஹூ பகுதியில் தனது கணவர் சித்தார்த் ராய் கபூருடன் வசித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள செம்பூர் வாக்குச்சாவடியில் காலையிலேயே சென்று வாக்க ளித்தார்.

நடிகையும் மாநிலங்களவை உறுப்பினருமான (நியமனம்) ரேகா, நடிகர் சன்னி தியோல், நடிகை சோனம் கபூர், பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா, கவிஞர்கள் பிரசூன் ஜோஷி, ஜாவேத் அக்தர், நடிகைகள் ஷபனா ஆஸ்மி, சோனாக்சி சின்ஹா, ஷில்பா ஷெட்டி ஆகியோரும் வாக்களித்தனர். பாந்த்ராவில் வாக்களித்த நடிகர் ஆமிர்கான், “ஜனநாயத்தில் வாக்களிப்பது முக்கிய நடைமுறையாகும். இந்தியன் என்ற முறையில் இது எனது கடமையாகும்” என்றார்.

தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய பின்பு நடிகர் ஷாருக் கான் கூறுகையில், “டி.வி. யில் நான் பார்க்க விரும்பும் சேனலைக் கூட பெரும்பாலும் நான் தேர்ந்தெடுப்பதில்லை. இன்று நாட்டின் எதிர்காலத்தை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது” என்றார்.

பல பாலிவுட் பிரபலங்கள் தங்களின் ட்விட்டர், பேஸ்புக் இணையதளப் பக்கங்களின் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கருத்து வெளியிட்டிருந்தனர். அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE