'கொலையுதிர் காலம்' படத்தின் இந்தி பதிப்பில் நயன்தாரா வேடத்தில் தமன்னா நடித்து வருகிறார்.
சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் 'கொலையுதிர் காலம்'. யுவன் தயாரித்து வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கி முடிவுற்றுள்ளது.
இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் படமான 'ஹஷ்' படப் பின்னணியைக் கொண்டு உருவாகி வருகிறது. காது கேட்காத, வாய் பேச முடியாத ஒரு பெண் எழுத்தாளர் வீட்டில் தனியாக இருக்கும் போது, சைக்கோ கொலைகாரன் ஒருவனிடம் சிக்கிக் கொள்கிறார். அவரிடமிருந்து தப்பித்தாரா என்பது தான் திரைக்கதை. தமிழில் இப்படத்தை யுவன் சங்கர் ராஜா மற்றும் பூஜா பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.
இந்தியிலும் இப்படம் உருவாகி வருகிறது. இதில் நயன்தாரா வேடத்தில் தமன்னா நடித்து வருகிறார். தமன்னாவோடு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபுதேவா மற்றும் பூமிகா நடித்து வருகிறார்கள். இந்தியிலும் சக்ரி டோல்டியே இயக்கி வருகிறார்.
இதன் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் 'கொலையுதிர் காலம்' இறுதிகட்ட படப்பிடிப்பில் கவனம் செலுத்தவுள்ளார் சக்ரி டோலட்டி.