சஞ்சய் லீலா பன்சாலி தாக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என ஆமிர்கான் தெரிவித்துள்ளார். '
'தங்கல்' படத்தின் வெற்றியை கொண்டாடும் விழாவில் பத்திரிகையாளர்களிடம் பேசினார் ஆமிர்கான். இதில் 'பத்மாவதி' திரைப்பட படப்பிடிப்பில் குழுவினரும், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியும் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ஆமிர் கானிடம் கேட்டபோது,
"நடந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. யாருமே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என நினைக்கிறேன். நடந்தது முற்றிலும் தவறே. நான் ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடத்தியுள்ளேன். அங்கிருக்கும் மக்கள் என்னிடம் அன்பாகவே இருந்தனர். நல்ல அனுபவங்களே எனக்குக் கிடைத்தன. ஆனால் எதிர்மறையான விஷயங்களைக் கேள்விப்படும்போது கஷ்டமாகத் தான் இருக்கிறது. வருத்தம் தருகிறது" என்றார்.
உண்மை வரலாற்று சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் 'பத்மாவதி' திரைப்படம் நவம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது. இதில் ராணி பத்மாவதியாக தீபிகா படுகோனேவும், ராஜா ரத்தன் சிங் வேடத்தில் ஷாஹித் கபூரும், அலாவுதின் கில்ஜி வேடத்தில் ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.