சல்மான்கான் - பிரபாஸ் இணைந்து நடிக்கவுள்ள படத்தை இயக்குவதாக வெளியாகியுள்ள செய்திக்கு ரோஹித் ஷெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார்.
'பாகுபலி 2' படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் உருவாகவுள்ள படம் 'சாஹோ'. இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டாலும், விரைவில் இதில் கலந்து கொள்ளவுள்ளார் பிரபாஸ்.
இந்நிலையில், பாலிவுட் இணையதளங்களில் சல்மான்கான் மற்றும் பிரபாஸ் இணைந்து நடிக்கவிருப்பதாகவும், ரோஹித் ஷெட்டி இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இச்செய்தி பலராலும் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.
இச்செய்திக்கு ரோஹித் ஷெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார். "இச்செய்தியில் உண்மையில்லை. கடந்த 3 வாரங்களாக ஸ்பெயினில் படப்பிடிப்பில் இருக்கிறேன். எங்கிருந்து இப்படியொரு செய்தி கிளம்பியது என தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார் ரோஹித் ஷெட்டி.
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகிவரும் 'கோல்மால் ஆகைன்' திரைப்படம், தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.