இந்தி ரீமேக்காகும் எஸ்கேப் ப்ளான்

By ஸ்கிரீனன்

ஹாலிவுட்டில் தயாரான 'எஸ்கேப் ப்ளான்' திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.

சில்வஸ்டர் ஸ்டாலோன், அர்னால்ட் நடிப்பில் வெளியாகியிருக்கும் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம் 'எஸ்கேப் ப்ளான்'. பி.வி.ஆர் நிறுவனம் இப்படத்தின் இந்திய விநியோக உரிமையை வாங்கியிருக்கிறது.

செய்யாத குற்றத்துக்காகக் கைது செய்யப்படும் கட்டுமானப் பொறியாளர் ஸ்டாலோன், தான் வடிவமைத்த சிறையிலேயே அடைக்கப்படுகிறார். சிறையிலிருந்து தப்பிச் சென்று தன்னை சிக்க வைத்தவனைப் பழிவாங்கத் துடிக்கிறார். அதற்காக அவர் போடும் திட்டத்துக்கு சக கைதியான அர்னால்ட் உதவுகிறார், இதுவே 'எஸ்கேப் ப்ளான்' கதைச் சுருக்கம்.

தற்போது இப்படத்தினை இந்தியில் ரீமேக் செய்யலாம் என்று முடிவு செய்து, படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறது பி.வி.ஆர். நிறுவனம். சில்வஸ்டர் ஸ்டாலோன், அர்னால்ட் வேடங்களில் அக்‌ஷய்குமார் மற்றும் ஜான் ஆபிரஹாம் ஆகியோரை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறார்கள்.

இது குறித்து பி.வி.ஆர் நிறுவனம் “ஆம். 'எஸ்கேப் ப்ளான்' படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறோம். இந்தியில் ஆக்‌ஷன் படங்களுக்கு தொடர்ச்சியாக வரவேற்பு கிடைத்து வருவதால், இப்படமும் வரவேற்பு பெரும் என்று நம்பிக்கையிருக்கிறது.

அர்னால்ட், ஸ்டாலோன் இருவருமே மிகப்பெரிய ஆக்‌ஷன் ஸ்டார்கள். அவர்களுக்கு இணையான இருவரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். அப்படத்தின் கதை, திரைக்கதை இரண்டுமே இந்திய மக்களுக்கு பிடிக்கும் வகையில் அமைந்திருப்பதால், படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE