'மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்' திரைப்படம் நடிகர் ரஜினியை போற்றும் விதமாகவே இருக்கும் என நடிகர் ஆதித்யா மேனன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கில் ‘மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற திரைப்படத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக >நடிகர் ரஜினிகாந்த் உயர் நீதிமன்றத்தில் மனுவில், இந்தப் படத்தால் தனது புகழும், நற்பெயரும் பாதிக்கப்படும் என்பதால் தனது பெயரையோ, தனது படங்களையோ பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 25-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றும், அதுவரை மெய்ன் ஹூன் ரஜினிகாந்த் படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், 'மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்' படத்தில் நடித்துள்ள நடிகர் ஆதித்யா மேனன் கூறும்போது, "நடிகர் ரஜினிகாந்தை கவுரப்படுத்தும் விதமாகவே எங்கள் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அவரை தவறானவராக காண்பிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை.
எவருமே ரஜினியைத் தவறானவராக காண்பிக்க நினைக்க மாட்டார்கள், நாங்கள் மட்டும் எப்படி நினைக்க முடியும். இது ரசிகர்களை சிரிக்க வைக்கும் நகைச்சுவைத் திரைப்படமே. அவரது பெயரைத் தவிர அவரைப் பற்றி எதுவும் இந்த திரைப்படத்தில் இல்லை. மக்கள் இந்தப் படத்தைப் பார்க்கும்போது அதை புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. படம் எந்த வித தடங்கலும் இன்றி வெளியாகும் என நம்புகிறேன். பட வெளியீடு தேதி குறித்து இறுதி முடிவை இயக்குநரும், தயாரிப்பாளரும் தான் எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
'மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்' படத்தில் ஆதித்யா மேனன், ரஜினிகாந்த் ராவ் என்ற கூலிப்படை ஆளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஃபைசல் சைஃப் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை வர்ஷா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. ஆதித்யா மேனன், தமிழில் வில்லு, நான் ஈ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.