மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது அனுராக் காஷ்யப்பின் ‘கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்’ 

By செய்திப்பிரிவு

மும்பை: அனுராக் காஷ்யப் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி வரவேற்பை பெற்ற ‘கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்’ திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது.

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான படம் ‘கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்’. மனோஜ் பாஜ்பாய், ரீமா சென், ரிச்சா சத்தா, நவாசுத்தீன் சித்திக், ஹூமா குரேஷி, பங்கஜ் திரிபாதி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. நவாசுத்தீன் சித்திக், ஹூமா குரேஷி, ரிச்சா சத்தா, பங்கஜ் திரிபாதி உள்ளிட்டோரின் திரைப் பயணத்தில் இப்படம் ஒரு முக்கிய அங்கம் வகித்தது.

இப்போது வரை பாலிவுட்டில் வெளியாகும் ஆக்‌ஷன் கேங்ஸ்டர் படங்களுக்கு இப்படம் ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது. இப்படத்தின் ஆரம்பத்தில் தமிழ் இயக்குநர்களான பாலா, சசிகுமார், அமீர் ஆகியோருக்கு இயக்குநர் அனுராக் காஷ்யப் நன்றி தெரிவித்திருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகமும் அதே ஆண்டில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இப்படங்கள் இரண்டும் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி திரையரங்களில் மீண்டும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.5 வரை திரையிடப்பட உள்ள இப்படங்களின் டிக்கெட் தலா ரூ.149 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE