கிரிக்கெட் ஜாம்பவான் யுவராஜ் சிங்கின் பயோபிக் அறிவிப்பு!

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “இந்த பயோபிக் மற்றவர்களை ஊக்குவிக்கும்” என யுவராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் உருவாகும் இப்படத்தை டி சீரிஸ் நிறுவனம் சார்பில் பூஷன் குமார் தயாரிக்கிறார். அவருடன் இணைந்து ரவி பாக்சந்த்கா தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. “யுவராஜ் சிங்கின் ஈடு இணையற்ற கிரிக்கெட் பயணத்தையும், கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த பங்களிப்பையும் கொண்டாடும் விதமாக இப்படம் அமையும். 2007 டி20 உலக கோப்பை போட்டியில் அவரது 6 சிக்சர்கள், களத்துக்கு உள்ளேயும், களத்துக்கு வெளியேயும் அவர் எதிர்கொண்ட போராட்டங்கள் குறித்தும் படம் பேசும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 வயதில் கிரிக்கெட்டுக்குள் நுழைந்த யுவராஜ் சிங், புற்றுநோயிலிருந்து மீண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது பயோபிக் அறிவிப்பு குறித்து யுவராஜ் சிங் கூறுகையில், “பூஷன் மற்றும் ரவி ஆகிய இரண்டு தயாரிப்பாளர்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான எனது ரசிகர்களுக்கு என் கதையை வெளிப்படுத்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். என் வாழ்வின் எல்லா உயர்வு தாழ்விலும் கிரிக்கெட் எனக்கு மிகப்பெரிய பலமாகவும், நான் நேசிக்கும் ஒன்றாகவும் இருந்துள்ளது. மற்றவர்கள் தங்கள் போராட்டங்களை சமாளித்து மீண்டெழவும், அசைக்க முடியாத கனவுகளை ஆர்வத்துடன் பின்தொடரவும் இந்தப் படம் ஊக்குவிக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

படம் குறித்து தயாரிப்பாளர் பூஷன் கூறுகையில், “யுவராஜ் சிங்கின் வாழ்க்கை என்பது கனவுகள், பின்னடைவு, வெற்றி, போராட்டங்களை உள்ளடக்கியது. ஒரு நம்பிக்கைக்குரிய கிரிக்கெட் வீரராக இருந்து கிரிக்கெட் ஹீரோவாக தொடர்ந்த அவர், நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருந்து பலருக்கும் உத்வேகம் அளித்துள்ளார். சொல்லியே ஆக வேண்டிய ஒரு கதையை பெரிய திரையில் கொண்டு வருவதன் மூலம் யுவராஜ் சிங்கின் அசாதாரண சாதனைகளை கொண்டாவதில் மகிழ்கிறேன்” என்றார். படத்தின் இயக்குநர், நடிகர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE