“சில தயாரிப்பாளர்கள் பணம் தராமல் ஏமாற்றி விட்டனர்” -  அக்‌ஷய் குமார் வேதனைப் பகிர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: சில தயாரிப்பாளர்கள் எனக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளனர். இதுவரை எனக்கான மீதிப் பணத்தை அவர்கள் தரவில்லை என்று நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேட்டி ஒன்றில் அக்‌ஷய் குமார் கூறியதாவது: “ஒவ்வொரு படத்துக்கு பின்னாலும் ஏராளமான வியர்வை, ரத்தம், கனவு இருக்கிறது. எந்த ஒரு படம் தோல்வி அடைவதை பார்க்கும்போதும் இதயம் வலிக்கிறது. ஆனால் அதிலும் நல்லவற்றை பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தோல்வியும் வெற்றியின் மதிப்பை கற்றுத் தருகிறது.

அதிர்ஷ்டவசமாக, என்னுடைய திரைப் பயணத்தின் தொடக்கத்திலேயே தோல்வியை சமாளிக்க கற்றுக் கொண்டுவிட்டேன். வெற்றி, தோல்வி என்பது நமது கைகளில் இல்லை. அடுத்த படத்தில் கவனம் செலுத்துவதும், அதற்காக கடின உழைப்பை செலுத்துவதும்தான் நம் கையில் உள்ளவை.

சில தயாரிப்பாளர்கள் எனக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளனர். இதுவரை எனக்கான மீதிப் பணத்தை அவர்கள் தரவில்லை. என்னை ஏமாற்றும் நபர்களிடம் நான் பேசுவதில்லை. நான் அதன்பிறகு அமைதியாகி விடுவேன்” இவ்வாறு அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று’. நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப்படம் இந்தியில் ‘சர்ஃபிரா’ (Sarfira) என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.

அக்‌ஷய் குமார் நடித்துள்ள இப்படத்தை இந்தியிலும் சுதா கொங்கராவே இயக்கினார். கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE