பாலிவுட்டில் கால் பதிக்கும் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ பட இயக்குநர் சிதம்பரம்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ பட இயக்குநர் சிதம்பரம் பொடுவால் புதிய படம் மூலம் பாலிவுட் இயக்குநராக அறிமுகமாகிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியில் ஃபாண்டம் ஸ்டுடியோஸ் ( Phantom Studios) தயாரிக்கும் இப்படத்தை இயக்குகிறார் சிதம்பரம். ஆனால் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது தொடர்பாக பேசியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ சிருஷ்டி பெஹல், “இயக்குநர் சிதம்பரம் எங்களின் ஃபாண்டம் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

மொழி இனி திரைப்பட இயக்குநர்களை கட்டுப்படுத்தாத இந்தப் புதிய உலகில், மொழி எல்லைகளைத் தாண்டிய கதைகளை வடிவமைக்க பல்வேறு பிராந்தியங்களில் இருந்து தனித்துவமான குரல்களை இந்தி சினிமாவில் கொண்டு வர உத்தேசித்துள்ளோம்.

அவரது தனித்துவமான பார்வை மற்றும் கதை சொல்லும் திறன் ஆகியவை ஃபாண்டம் ஸ்டுடியோவில் உள்ள எங்கள் படைப்பு நெறிமுறைகளுடன் முழுமையாக ஒத்துப்போகின்றன. அவரது பார்வையை இந்தி திரைப்பட பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் அறிமுகம் குறித்து பேசிய இயக்குநர் சிதம்பரம், “பாலிவுட் திரையுலகில் அடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எப்போதும் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ எனக்கு ஸ்பெஷலான திரைப்படமாக இருக்கும். பாண்டம் தயாரிப்பு நிறுவனத்துடன் எனது முதல் இந்திப் படத்துக்காக இணைந்தது மகிழ்ச்சி. புதிய கதைகளை பரவலான பார்வையாளர்களுக்கு கொண்டு செல்லும் இந்த வாய்ப்பாக கருதுகிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE