அதிக பார்வைகளை ஈர்த்தவர்கள்: ஐஎம்டிபி பட்டியலில் தீபிகா படுகோன் முதலிடம்... தமிழ் நடிகர்கள்?

By செய்திப்பிரிவு

சென்னை: உலகளவில் கடந்த பத்து ஆண்டுகளில் அதிக பார்வைகளை ஈர்த்த முதல் 100 இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை ஐஎம்டிபி புதன்கிழமை வெளியிட்டது. இதில் தீபிகா படுகோனே முதலிடத்தை பிடித்துள்ளார். முதல் 15 இடத்தில் இருக்கும் ஒரே தென்னிந்திய நடிகர் சமந்தா. தனுஷுக்கு 30-ஆவது இடம் கிடைத்துள்ளது.

சினிமா தொடர்பான தகவல்கள் அடங்கிய உலகளாவிய முன்னணி வலைதளம் ஐஎம்டிபி. இந்த வலைதளத்தை மாதத்துக்கு 250 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிடுவதாக ஐஎம்டிபி தெரிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த ஜனவரி 2014 தொடங்கி ஏப்ரல் 2024-ம் ஆண்டு வரை அதிகம் பேரால் பார்வையிடப்பட்ட நட்சத்திரங்களின் வியூஸ் அடிப்படையில் ஐஎம்டிபி தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் இந்திய நடிகை தீபிகா படுகோன் முதலிடத்தை பிடித்துள்ளார். அடுத்தடுத்த இடங்களில் ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், ஆலியாபட், இர்ஃபான், ஆமீர்கான், சுஷாந்த் சிங் ராஜ்புத், சல்மான்கான், ஹிரித்திக் ரோஷன், அஷஷய் குமார் ஆகியோர் முறையே முதல் 10 இடங்களில் உள்ளனர்.

இந்த முதல் 10 இடங்களில் தென்னிந்திய நடிகர்கள் யாரும் இடம்பெறவில்லை. 13-வது இடத்தை நடிகை சமந்தா பிடித்துள்ளார். 16-வது இடத்தில் தமன்னாவும், 18-ஆவது இடத்தில் நயன்தாராவும் உள்ளனர். 30-வது இடத்தில் தனுஷும், 35-வது இடத்தில் விஜய்யும், 42-ஆவது இடத்தில் ரஜினியும் உள்ளனர்.

இது தொடர்பான நடிகை சமந்தா பகிர்ந்துள்ள பதிவில், “இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரின் முயற்சியும், பார்வையாளர்கள் என்னிடம் காட்டிய அசாத்திய அன்பும் நம்பிக்கையும் இதற்கு காரணம். மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நன்றி ஐஎம்டிபி” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE