காணாமல் போன பஞ்சாபி நடிகர் வீடு திரும்பினார்: காரணம் குறித்து போலீஸில் வாக்குமூலம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காணாமல் போன பஞ்சாபி நடிகர் குருசரண் சிங் மீண்டும் வீடு திரும்பினார். ஆன்மிக பயணத்துக்காக வீட்டை விட்டு வெளியேறியதாக நடிகர் குருசரண் சிங் போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

பிரபல பாலிவுட் சீரியலான ‘தாரக் மேத்தா கா ஊல்தா சாஷ்மா’வில் ரோஷன் சிங் சோதி என்ற கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர் பஞ்சாபி நடிகர் குருசரண் சிங். கடந்த ஏப்ரல் 22ம் தேதி தனது பெற்றோரை சந்தித்துவிட்டு மும்பை செல்வதற்காக டெல்லி விமான நிலையம் சென்றிருந்தார். அதன்பிறகு அவரை காணவில்லை. தொடர்ந்து அவரை காணவில்லை என்று அவரது தந்தை டெல்லி போலீஸில் புகார் அளித்தார்.

அவரை கண்டுபிடிக்க பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. ரசிகர்கள் இணையதளத்தில் அவர் காணாமல் போனது குறித்து கவலைகளை எழுப்பி வந்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் கிரிடிட் கார்டு சில இடங்களில் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் தற்போது நடிகர் குருசரண் சிங் மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

டெல்லியில் உள்ள வீட்டுக்கு திரும்பிய அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் ஆன்மிக பயணத்துக்காக வீட்டை விட்டு வெளியேறியதாக நடிகர் குருசரண் சிங் போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE