“திருமணத்துக்குப் பின் ஆணிடம் ஆடை கட்டுப்பாடு விதிப்பீர்களா?” - ரகுல் ப்ரீத் சிங் கொதிப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: “திருமணத்துக்குப் பிறகு ஓர் ஆணிடம் இப்படித்தான் உடை அணிய வேண்டும் என சொல்வீர்களா?” என ஆடைக் கட்டுப்பாடு குறித்து ரகுல் ப்ரீத் சிங் கொந்தளிப்புடன் பேசியுள்ளார்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தொழிலதிபர் ஜாக்கி பக்னானியை கரம்பிடித்தார். இவர்களின் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் கோவாவில் நடைபெற்றது. இந்நிலையில், திருமண வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நாங்கள் 10 சதவீதம் தவிர்த்து, மீதி 90 சதவீதம் ஒத்துப்போகிறோம். நான் நேரத்தை மிகவும் கவனமாக செலவிடுவேன். அவர் அப்படியில்லை. இருந்தாலும் இப்போது கொஞ்சம் மாறிவிட்டது.

உணவு, பிடித்தவை, பிடிக்காதவை, விடுமுறைக்குச் செல்லும் இடங்கள் என எங்கள் இருவரின் தேர்வும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும். திருமணத்துக்குப் பிறகு பெரிய மாற்றம் எதுவுமில்லை. ‘மிஸஸ்’ என்பது மட்டுமே மாற்றமாக நினைக்கிறேன்” என்றார்.

திருமணத்துக்குப் பிறகான ஆடை கட்டுப்பாடு குறித்து பேசுகையில், “ஜாக்கியின் குடும்பமும் சரி, என் குடும்பமும் சரி உடை தொடர்பான எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை. நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.

இந்தியாவில் திருமணம் என்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அனைவரின் வாழ்க்கையிலும் நடக்கும் இயற்கையான நடைமுறை தான் இது. திருமணத்துக்குப் பிறகு ஓர் ஆணிடம் இப்படித்தான் உடை அணிய வேண்டும் என சொல்வீர்களா? காலம் மாறிவிட்டது, அவரவருக்கு விருப்பமானதை அவர்கள் செய்கிறார்கள்” என்றார் ரகுல் ப்ரீத் சிங்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE