பிரபல இந்தி திரைப்பட பாடகி ஆஷா போஸ்லே. தமிழிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார். ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘செண்பகமே செண்பகமே’, ‘ஹே ராம்’ படத்தில் ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’, ‘அலைபாயுதே’ படத்தில் ‘செப்டம்பர் மாதம்’, ‘சந்திரமுகி’யில் ‘கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்’ உட்பட பல பாடல்களைப் பாடியிருக்கிறார். தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் பாடியுள்ள இவரின் பேத்தி, ஜனாய் போஸ்லே கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கைக் கதை, ‘தி பிரைட் ஆஃப் பாரத்–சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ என்ற பெயரில் சினிமாவாகிறது. சந்தீப் சிங் இயக்கும் இதில் சிவாஜியின் மனைவி ராணி சாய் போன்ஸ்லேவாக, ஜனாய் நடிக்கிறார். இதை சமூக வலைதளப் பக்கத்தில் ஆஷா போஸ்லே தெரிவித்துள்ளார்.
“திரைத்துறையில் இணைந்திருக்கும் என் பேத்தியை நினைத்து மகிழ்கிறேன். அவர் நடிகையாக சிறந்த இடத்தைப் பெறுவார் என நம்புகிறேன்” என்று வாழ்த்தி யுள்ளார். இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் உருவாகிறது.