இயக்குநர் குமார் சஹானி காலமானார்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: பிரபல இந்தி பட இயக்குநரும் புதிய அலை சினிமா முன்னோடியுமான குமார் சஹானி காலமானார். அவருக்கு வயது 83.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள,லர்கானாவில் பிறந்தவர் குமார் சஹானி. பிரிவினைக்குப் பிறகு அவர் குடும்பம் மும்பை வந்தது.புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த குமார்சஹானி, 'மாயா தர்பன்' என்ற படம் மூலம் இயக்குநர் ஆனார். 1972-ம் ஆண்டு வெளியான இந்தப் படம்தேசிய விருதைப் பெற்றது. 12 வருடங்களுக்குப் பிறகு 'தாரங்' என்ற அடுத்த படத்தை இயக்கினார். இதுவும் தேசிய விருதைப் பெற்றது. அடுத்து, காயல்கதா, கஸ்பா, சார் அத்யாய் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் திரைப்படங்கள் இத்தாலியின் பியர் பாவ்லோ பசோலினி, ரஷ்யாவின் ஆண்ட்ரீ தர்கோவ்ஸ்கியுடன் ஒப்பிடப்பட்டன.

தனது படங்களுக்காக சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ள இவர் கொல்கத்தாவில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு மனைவி,2 மகள்கள் உள்ளனர். குமார் சஹானியின் இறுதிச்சடங்கு நேற்று நடந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE