நாயகிகளை இப்படியா தேர்வு செய்வது? - நேகா சர்மா வருத்தம்

By செய்திப்பிரிவு

தமிழில், சோலோ என்ற படத்தில் நடித்தவர், நேகா சர்மா. தெலுங்கு, இந்தியில் பல படங்களில் நடித்துள்ள இவர், சினிமாவில் நாயகி தேர்வில் மோசடி நடப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:

பல படங்களின் ஆடிஷனுக்கு சென்றுள்ளேன். சிறப்பாகவே நீங்கள் செய்திருந்தாலும் அனைத்துப் படங்களிலும் உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்காது. கதை நன்றாக இருந்தால் நானே ஆர்வமாக இருப்பேன். இல்லை என்றால் விட்டுவிடுவேன். ஒரு படத்தின் ஆடிஷனுக்கு சென்றிருந்தேன். நான்கு, ஐந்து முறைகாட்சியை எடுத்தார்கள். பிறகு நன்றாக நடித்திருப்பதாகவும் கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பதாகவும் சொன்னார்கள். விரைவில் அழைப்பதாகவும் கூறினார்கள். அழைக்கவில்லை.

பிறகு ஒரு நாள் அந்தப் படத்தில் உங்களுக்கு வாய்ப்பு வழங்க முடியவில்லை என்று சொன்னார்கள். ஏன் என்று கேட்டபோது, உங்களை விட, சமூக வலைதளத்தில் கோடிக்கணக்கான ஃபாலோயர்களை கொண்ட நடிகையை ஒப்பந்தம் செய்தோம் என்றார்கள். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. திறமை அடிப்படையில்இல்லாமல் சமூக வலைதளங்களில் இருக்கும் ஃபாலோயர்களின் அடிப்படையில் நடிகைகளைத் தேர்வு செய்வது கவலை அளிக்கும் விஷயம்.

இவ்வாறு நேகா சர்மா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE