சென்னை: இந்தி நடிகர், கமால் ஆர் கான், இந்தித் திரைப்படங்கள் பற்றியும், நடிகர்கள் பற்றியும் அவதூறானக் கருத்துக்களைப் பதிவிட்டு சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு, மறைந்த நடிகர்கள் ரிஷி கபூர், இர்ஃபான் கான் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை இவர் தெரிவித்திருந்தார். இதனால் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் துபாய் செல்வதற்காக மும்பை விமான நிலையம் வந்த அவரை போலீஸார் கைது செய்தனர். 2016ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி கமால் கான் தனது பதிவில், “கடந்த ஒரு வருடமாக மும்பையில் இருக்கிறேன். வழக்கு நடைமுறைகளுக்காகத் தொடர்ந்து ஆஜராகி வருகிறேன். புத்தாண்டு கொண்டாட்டத்துக்காகத் துபாய் செல்ல மும்பை விமான நிலையம் வந்த என்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.
‘டைகர் 3’ படம் என்னால் தோல்வி அடைந்தது என்று சல்மான் கான் கூறுகிறார். எந்த சூழலிலும் போலீஸ் ஸ்டேஷனிலோ, சிறையிலோ நான் உயிரிழக்க நேரிட்டால் அது கொலை என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இதற்கு யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று கூறியுள்ள கமால் ஆர் கான், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் டேக் செய்துள்ளார்.