உருவாகிறது ‘அனிமல் 2’: சந்தீப் ரெட்டி வங்கா தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த 1-ம் தேதி வெளியான திரைப்படம் ‘அனிமல்’. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இந்தப் படத்தில், அனில் கபூர், சுரேஷ் ஓபராய், திரிப்தி டிம்ரி உட்பட பலர் நடித்தனர். இதில் சில காட்சிகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானாலும் வசூலில் சாதனைப் படைத்துள்ளது. பான் இந்தியா முறையில் வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.850 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில், ‘அனிமல்’ 2-ம் பாகத்தை ‘அனிமல் பார்க்’ என்ற பெயரில் உருவாக்க இருப்பதாக இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளார்.

அடுத்து, அவர் பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் அக்டோபரில் தொடங்க இருக்கிறது. அதை முடித்துவிட்டு ‘அனிமல் 2’,2025-ல் உருவாக இருக்கிறது. பின்னர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அவர் இயக்க இருக்கிறார். இந்த 3 படங்களையும் ‘அனிமல்’ படத்தை தயாரித்த டி -சீரிஸ் நிறுவனத்தின் பூஷன் குமார் தயாரிக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE