விஜய் சேதுபதி அற்புதமான நடிகர்: புகழ்கிறார் கேத்ரினா கைஃப்

By செய்திப்பிரிவு

மும்பை: பிரபல பாலிவுட் இயக்குநர் ராம் ராகவன் இயக்கும் படம், ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’. இந்தி, தமிழில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, கேத்ரினா கைஃப், ராதிகா சரத்குமார், சண்முகராஜன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜன.12-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் ஜெட்டாவில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்ட கேத்ரினா கைப்ஃ, விஜய் சேதுபதியுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அது ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ மூலம் கிடைத்ததில் மகிழ்ச்சி. இது அற்புதமான படம். நான் நடித்த படங்களிலேயே மிகவும் கஷ்டமாக இருந்த படமும் இதுதான். ஏனென்றால் இந்த கேரக்டர் என்னிடம் இருந்து அதிகம் எடுத்துக்கொண்டது. விஜய் சேதுபதியுடன் நடிக்கும்போது ஒரு நடிகராக , அவர் உங்களுக்கு சவாலானவராக இருக்கிறார். இந்தி, தமிழில் உருவாகியுள்ள படம் இது. இரண்டு மொழிக்கும் தனித்தனியாக எடுத்தோம். தமிழ்ப் பதிப்புக்காக நான் தமிழ்ப் பேசி நடித்தேன். அதனால் எதை செய்தாலும் இரண்டு பகுதியாக செய்ய வேண்டும் என்பதால் அது வித்தியாசமான அனுபவமாகவும் உற்சாகமாகவும் இருந்தது. விஜய் சேதுபதி அற்புதமானவர். இந்தி பதிப்பைப் படமாக்கும்போது பிரம்மாதமாக இருப்பார். தமிழ்ப் பதிப்பை படமாக்கும்போது அவர் வேறொருவராக மாறியிருப்பார்.

இவ்வாறு கேத்ரினா கைஃப் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE