சல்மான் கானின் ‘டைகர் 3’ மூன்று நாட்களில் ரூ.240 கோடி வசூல்

By செய்திப்பிரிவு

மும்பை: சல்மான் கான் நடித்துள்ள ‘டைகர் 3’ படம் மூன்று நாட்களில் ரூ.240 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சல்மான் கான், கேத்ரினா கைஃப் நடித்துள்ள இந்தி படம் ‘டைகர் 3’. பான் இந்தியா முறையில் தமிழிலும் வெளியாகியுள்ள இந்தப் படத்தை யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இதை மனீஷ் சர்மா இயக்கியுள்ளார். இம்ரான் ஹாஷ்மி, ரேவதி, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ப்ரிதம் இசையமைத்துள்ளார்.

யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களில் ஒன்றாக வெளியாகியுள்ள இப்படம், தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. முதல் நாள் முதல் காட்சியின்போது ரசிகர்கள் சிலர் தியேட்டருக்குள் ராக்கெட் விட்டு கொண்டாடிய சம்பவங்களெல்லாம் அரங்கேறியது.

இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் முதல் நாள் ரூ.94 கோடியை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது 3 நாட்களில் படம் உலகம் முழுவதும் ரூ.240 கோடியை வசூலித்துள்ளதாகவும், இந்தியாவில் ரூ.180.50 கோடியையும், மற்ற நாடுகளில் ரூ.59.50 கோடியையும் வசூலித்துள்ளதாகவும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE