”பணிப்பெண்ணின் மகளை காணவில்லை... கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.50,000 சன்மானம்” - சன்னி லியோனி

By செய்திப்பிரிவு

மும்பை: தனது வீட்டுப் பணிப்பெண்ணின் 9 வயது மகள் காணாமல் போனதாகவும், அந்தச் சிறுமியை பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்து வருபவர்களுக்கு தான் தனிப்பட்ட முறையில் ரூ.50,000 சன்மானம் கொடுப்பதாகவும் நடிகை சன்னி லியோனி அறிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகையான சன்னி லியோனி, குழந்தைகளை தத்தெடுப்பது, தொண்டு பணிகளில் ஈடுபடுவது முதலானவற்றில் சமூக அக்கறையுடன் ஈடுபட்டு வருபவர். இந்த நிலையில், தனது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்ணின் மகள் காணாமல் போனதாகவும், அந்த சிறுமியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு, தான் தனிப்பட்ட முறையில் ரூ.50,000 கொடுப்பதாகவும் அறிவித்துள்ளார். அந்தச் சிறுமி காணாமல் போனது பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தகவல் பகிர்ந்துள்ளார்.

அதில், "எனது வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணின் 9 வயது மகள் அனுஷ்கா கிரண் மோரேவை நேற்று மாலையில் இருந்து காணவில்லை. அந்தச் சிறுமியை பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்து வருபவர்களுக்கு தனிப்பட்ட முறையில் 50,000 ரூபாய் கொடுக்க தயாராக உள்ளேன். அனுஷ்கா கிரண் மோரேவை அவரின் பெற்றோர் தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை போலீஸை காவல் துறையை டேக் செய்து, அந்தச் சிறுமியின் புகைப்படத்தையும், அவருடைய பெற்றோரின் தகவலையும் பகிர்ந்திருக்கிறார். போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி அறிக்கைகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை, மகாராஷ்டிராவில் 16-35 வயதுக்குட்பட்ட 3,594 சிறுமிகள் மற்றும் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE