மும்பை: பிரபல இந்தி நடிகர் தலிப் தாஹில். இவர், ‘கயாமத் சே கயாமத் தக்’, ‘பாஸிகர்’, ‘ரா ஒன்’, ‘ஜுத்வா’, ‘சோரி சோரி சுப்கே சுப்கே’, ‘மிஷன் மங்கள்’ உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். தமிழில், சூர்யா நடித்த ‘அஞ்சான்’, ரஜினியின் ‘தர்பார்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2018-ம் ஆண்டு, மும்பை கர் பகுதியில் மதுபோதையில் கார் ஓட்டி, ஆட்டோ மீது மோதினார். இதில் ஆட்டோவில் இருந்த ஜெனிதா காந்தி (21), கவுரவ் சுக் (22) ஆகியோர் காயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடினார். ஆனால் விநாயகர் சிலை ஊர்வலம் காரணமாக, டிராபிக் ஜாமில் சிக்கிக்கொண்ட அவரை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் தலிப் தாஹில் மதுபோதையில் வாகனம் ஓட்டியது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 2 மாதம் சிறைத்தண்டனை வழங்கி இப்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.