சக்திமானாக நடிக்கிறாரா ரன்வீர்? - டொவினோ தாமஸ் கூறியது என்ன?

By செய்திப்பிரிவு

மும்பை: ‘மின்னல் முரளி’ இயக்குநர் பேசில் ஜோசப் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதை நடிகர் டொவினோ தாமஸ் உறுதி செய்துள்ளார்.

கடந்த 1997-ம் ஆண்டு தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான தொடர் ‘சக்திமான்’. அப்போதைய சிறுவர்களிடையே மிகவும் பிரபலமடைந்த இந்தத் தொடர் கிட்டத்தட்ட 2005-ம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்டடது. இதில் சக்திமானாக முகேஷ் கண்ணா நடித்திருந்தார். இந்தத் தொடரை சூப்பர்ஹீரோ திரைப்படமாக உருவாக்க இருப்பதாக சோனி நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. ஒரு பேட்டியில் இது குறித்து பேசிய முகேஷ் கண்ணா பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவர் சக்திமானாக நடிக்க இருப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், மலையாள நடிகர் டொவினோ தாமஸ் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் மூலம் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் அதில் ’லவ் ஃப்ரம் மும்பை’ என்று கமெண்ட் செய்திருந்தார். ரன்வீருக்கு பதிலளித்த டொவினோ, ’மின்னல் முரளி’ இயக்குநர் பேசில் ஜோசப் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதை உறுதி செய்தார். ஆனால் அது என்ன படம் என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ‘சக்திமான்’ படத்தை பேசில் ஜோசப் இயக்க அதில் ரன்வீர் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கிவிட்டது.

மின்னல் முரளி: பேசில் ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம் நடித்த படம் ‘மின்னல் முரளி’. சூப்பர் ஹீரோ கதைக்களத்தைக் கொண்ட இப்படம் கடந்த 2021ல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. உலகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் ‘மின்னல் முரளி’ நெட்ஃப்ளிக்ஸ் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE