’புஷ்பா’ படத்தை மும்முறை பார்த்தேன் - அல்லு அர்ஜுன் வாழ்த்துக்கு ஷாருக் பதில்

By செய்திப்பிரிவு

மும்பை: ’ஜவான்’ படத்தின் வெற்றிக்கு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஷாருக்கான் ‘புஷ்பா’ படத்தை மூன்று நாட்களில் மூன்று முறை பார்த்ததை நினைவுகூர்ந்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் அண்மையில் வெளியான ’ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.700 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் பக்கத்தில் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “இந்த இமாலய வெற்றிக்கு ‘ஜவான்’ படத்துக்கு மிகப் பெரிய வாழ்த்து. ஷாருக்கானின் ‘ஸ்வாக்’-ஐ தாண்டி, இதுவரை இல்லாத மாஸான அவரது அவதாரம், ஒட்டுமொத்த இந்தியாவையும் மதிமயக்கி வருகிறது. உங்களுக்காக உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காகத்தான் நாங்கள் உங்களுக்காக பிரார்த்தனை செய்தோம்” என்று அல்லு அர்ஜுன் கூறியிருந்தார்.

இதனை ரீபோஸ்ட் செய்துள்ள ஷாருக்கான், “மிக்க நன்றி நண்பா. உங்களுடைய அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி. ‘ஸ்வாக்’ என்று வரும்போது அந்த ‘ஃபயரே’ என்னை பாராட்டுவது.. வாவ்.. இது எனது நாளை சிறப்பாக்கிவிட்டது. 'புஷ்பா’ படத்தை மூன்று நாட்களில் மூன்று முறை பார்த்தபோது நான் உங்களிடமிருந்து சில விஷயங்களைக் கற்றுக்கொண்டேன் என்பதை நான் ஒப்புக் கொள்ளவேண்டும். உங்களுக்கு ஒரு பெரிய ‘ஹக்’. கூடிய விரைவில் நேரில் தனிப்பட்ட முறையில் வந்து தருகிறேன்” என்று ஷாருக் பதிலளித்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி, சஞ்சய் தத் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கடந்த 7-ம் தேதி இந்தப் படம் வெளியானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE