வெற்றிமாறன், லோகேஷ் படங்களில் நடிக்க விரும்புகிறேன்: ராஜ்குமார் ராவ் பகிர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், மணிரத்னம் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் தெரிவித்துள்ளார்.

‘தி ஃபேமிலி மேன்’, ‘ஃபார்சி’ ஆகிய தொடர்களை இயக்கிய ராஜ் & டிகே தற்போது இயக்கியிருக்கும் புதிய தொடர் ‘கன்ஸ் & குலாப்ஸ். நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ள இத்தொடரில் ராஜ்குமார் ராவ், துல்கர் சல்மான் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தொடரின் மூலம் துல்கர் சல்மான் முதல் முறையாக வெப் தொடரில் நடித்துள்ளார்.

இத்தொடருக்கான புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர். சமீபத்தில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு நடிகர் ராஜ்குமார் ராவ் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தனக்குப் பிடித்த தமிழ் இயக்குநர்கள் குறித்தும், அவர்களுடன் பணியாற்ற விரும்புவது குறித்தும் பகிர்ந்துள்ளார்.

அப்பேட்டியில் ராஜ்குமார் ராவ் கூறியிருப்பதாவது: “நான் எப்போதுமே வெற்றிமாறனின் மிகப்பெரிய ரசிகன். அவரது எல்லா படங்களும் எனக்கு பிடிக்கும். அதே போல லோகேஷ் கனகராஜ் படங்களும் பிடிக்கும். மணிரத்னம் பிடிக்கும். நான் அவர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். லோகேஷ் தன்னுடைய படங்களில் மிகவும் புத்திசாலித்தனமாகவும், தனித்துவமாகவும் கதாபாத்திரங்களை வடிவமைக்கிறார் என்பது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நடிகருக்கும் கனவு” இவ்வாறு ராஜ்குமார் ராவ் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE