இந்திய குடியுரிமை பெற்றார் நடிகர் அக்‌ஷய் குமார்: ட்வீட் செய்து மகிழ்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாலிவுட் சினிமா நடிகர் அக்‌ஷய் குமார், இந்திய குடியுரிமையை பெற்றுள்ளார். அதற்கான சான்றை எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார்.

55 வயதான அக்‌ஷய் குமார், கடந்த 30 ஆண்டுகளாக இந்திய திரைத்துறையில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அண்மையில் அவரது நடிப்பில் ‘ஓ.எம்.ஜி 2’ படம் வெளியானது. இதில் சிவபெருமானின் தூதுவராக அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். இந்த சூழலில் அவர் இந்திய குடியுரிமை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கனடா நாட்டு குடியுரிமையை அவர் பெற்றிருந்தார். அது சார்ந்து அவர் மீது ஒரு தரப்பினர் விமர்சனம் மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில் இந்திய குடியுரிமையை அவர் பெற்றுள்ளார்.

இந்திய பாஸ்போர்ட் வேண்டி அவர் கடந்த 2019-ல் விண்ணப்பித்து இருந்ததாக தகவல் வெளியானது. கரோனா பெருந்தொற்று காரணமாக அதை பெறுவதில் காலதாமதமானது என அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் குடியுரிமை பெற்றுள்ளதற்கான சான்றை பகிர்ந்து தனது சுதந்திர தின வாழ்த்தை அவர் தெரிவித்துள்ளார். அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE