10 நாட்களில் ரூ.100 கோடி வசூல் - கரண் ஜோஹரின் ‘ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி’ ஹிட்டு!

By செய்திப்பிரிவு

கரண் ஜோஹர் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி’ திரைப்படம் 10 நாட்களில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் கரண் ஜோஹர். 1998-ஆம் ஆண்டு ஷாருக் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘குச் குச் ஹோத்தா ஹை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், ‘கபி குஷி கபி கம்’, ‘கபி அல்விதா நா கெஹ்னா’, ‘மை நேம் இஸ் கான்’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தார். கடைசியாக 2016-ல் வெளியான ‘ஏ தில் ஹே முஷ்கில்’ படத்தை இயக்கிய அவர், அதன் பிறகு எந்த படத்தையும் இயக்கவில்லை. மாறாக தயாரிப்புப் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்தி வந்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கரண் ஜோஹர் இயக்குநராக களமிறங்கிய படம் ‘ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி’. இப்படம் கடந்த ஜூலை 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. காதலை மையமாக கொண்ட இப்படத்தில் ரன்வீர் சிங், ஆலியா பட், தர்மேந்திரா, ஜெயா பச்சன், ஷபானா ஆஸ்மி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ப்ரித்தம் இசையைமத்துள்ளார். ரூ.160 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் 10 நாட்களில் ரூ.105 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE