மும்பை: பிரபல இந்திப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப். தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்துள்ள இவர் மீது, நடிகை பாயல் கோஷ், 2020-ம் ஆண்டு மீடூ புகார் கூறியிருந்தார். அதில், 2014-ம் ஆண்டு தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றதாகக் கூறியிருந்தார். இதுதொடர்பாக போலீஸில் புகார் அளித்திருந்தார். புகார் அளித்து 2 வருடங்கள் ஆன நிலையில், இதுபற்றி பாயல் கோஷ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
"நான் பணம் படைத்தவளோ, சக்திவாய்ந்தவளோ இல்லை. அதனால், எனக்கு ஆதரவாகவும் அவருக்கு எதிராகவும் பேச யாரும் வருவார்கள் என்று எதிர்பார்க்கவும் இல்லை. நான் தனியாகவே போராடுகிறேன். இது எங்கு போய் முடியும் என்பதும் தெரியும். அவருக்கு எதிராக யாரும் கருத்துச் சொல்ல மாட்டார்கள். அவர் இயக்குநர் என்பதால் அவருடனான உறவை அவர்கள் மதிக்கிறார்கள். பாலிவுட் கலைஞர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். சரியானவற்றுக்கு ஆதரவு கொடுங்கள்.
திரைத்துறையினரின் வாரிசுகளாக இல்லாமல் வெளியில் இருந்து திரைத்துறைக்கு வருபவர்களுக்கும் கருணை காட்டுங்கள். ஏகபோகமாக்க முயற்சிக்காதீர்கள். ஒவ்வொரு நாளும் இந்தத் துறையில் தானும் ஒருவராக மாற லட்சக்கணக்கானவர்கள் முயற்சிக்கிறார்கள். அவர்களின் கனவுகளை எளிதாக நசுக்கி விடாதீர்கள். ஒருவர் இங்கு பலம் படைத்தவராக இருப்பதால் மட்டுமே அவர் சரியானவர் என்று கருதிவிட முடியாது" இவ்வாறு பாயல் கோஷ் தெரிவித்துள்ளார்.