ஹைதராபாத்: நடிகை தீபிகா படுகோன் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் என்று நடிகர் பிரபாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிக்கும் படம் ‘கல்கி 2829 கிபி’. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சயின்ஸ் ஃபிக்ஷன் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.
இந்த நிலையில், அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு பிரபாஸ் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது: “தீபிகா படுகோன் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். மிகவும் அழகான பெண். உலகம் முழுவதும் ஏற்கெனவே மிகவும் பிரபலமானவர். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் துடிப்போடு இருப்பார். அவரை எனக்கு எப்போதும் பிடிக்கும். நான் அவருடன் பணியாற்ற விரும்பினேன். இப்போதுதான் முதல் முறையாக அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது” என்று பிரபாஸ் கூறினார்.