4 முறை தேசிய விருது வென்ற கலை இயக்குநர் நிதின் தேசாய் தற்கொலை

By செய்திப்பிரிவு

மும்பை: பாலிவுட்டின் பிரபல கலை இயக்குநர் நிதின் சந்திரகாந்த் தேசாய் அவரது ஸ்டுடியோவில் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 57.

பாலிவுட்டில் வெளியான முக்கியமான படங்களிலும், பிரபல இயக்குநர்களுடனும் கலை இயக்குநராக பணியாற்றியவர் நிதின். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருந்த இவர், ராஜ்குமார் ஹிரானி, சஞ்சய் லீலா பன்சாலி, அசுதோஷ் கோவாரிகர், விது வினோத் உள்ளிட்ட பல இயக்குநர்களுடன் பணியாற்றியுள்ளார். ஐகானிக் படங்களான ‘1942: ஏ லவ் ஸ்டோரி’, ‘தேவ்தாஸ்’, ‘லகான்’, ‘ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மும்பை’, ‘ஜோதா அக்பர்’, ‘பாஜிராவ் மஸ்தானி’ உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு கலை ஆக்கம் செய்திருக்கிறார்.

‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்’, ‘ஹம் தில் தே சுகே சனம்’, ‘லகான்’, ‘தேவ்தாஸ்’ ஆகிய படங்களின் சிறந்த கலை இயக்கத்துக்கான தேசிய விருதை வென்ற இவர், மும்பையின் கஜ்ரட் பகுதியில் 52 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2005-ம் ஆண்டு ஸ்டுடியோ ஒன்றை நிறுவினார். ‘ஜோதா அக்பர்’, ‘ட்ராஃபிக் சிக்னல்’, உள்ளிட்ட படங்களும், பிக்பாஸ் நிகழ்ச்சியும் இந்த ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டுள்ளன. ‘Daud’ என்ற இந்தி படத்தில் நடித்துள்ள இவர், ‘ஹலோ ஜெய்ஹிந்த்’ படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இன்று நிதின் தனது சொந்த ஸ்டுடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் தொல்லை காரணமாக அவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் நிலையில், மும்பை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE