“நான் இன்னும் பணக் கஷ்டத்தில்தான் இருக்கிறேன்” - ரூ.170 கோடி சொத்து மதிப்பு தகவலை மறுத்த மனோஜ் பாஜ்பாய்

By செய்திப்பிரிவு

மும்பை: மனோஜ் பாஜ்பாயின் சொத்து மதிப்பு ரூ.170 கோடி என தகவல் வெளியான நிலையில், அது குறித்து பதிலளித்துள்ள அவர், “நான் இன்னுமே பொருளாதார ரீதியாக கஷ்டபட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்” என்று பேசியுள்ளார்.

பாலிவுட்டில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர் மனோஜ் பாஜ்பாய். ‘ஃபேமிலி மேன்’ வெப்சீரிஸ் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். அண்மையில் வெளியான அவரது கோர்ட் ரூம் ட்ராமா தொடரான ‘சிர்ஃப் எக் பந்தா காஃபி ஹை’ (Sirf Ek Bandaa Kaafi Hai) வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் மனோஜ் பாஜ்பாய் சொத்து மதிப்பு ரு.170 கோடி என தகவல் பரவி வந்தது.

இது தொடர்பாக கேட்கப்பட்ட செய்தியாளர் கேள்விக்கு சிரித்த அவர், “இன்றும் என்னுடைய வங்கி கணக்கில் குறிப்பிட்ட பணத்தை சேர்க்க நான் போராடிக் கொண்டிருக்கிறேன். ‘அலிகர்’ (Aligarh - 2015), ‘போன்ஸலே’ (Bhonsle - 2018) போன்ற என்னுடைய பட வரிசைகளின் மூலம் என்னால் அந்த அளவு பணத்தை ஈட்டுவது சாத்தியமில்லை. இதுபோன்ற செய்திகளை படித்து தயாரிப்பாளர் என் சம்பளத்தை உயர்த்துவார் என நம்புகிறேன்” என்றார் கிண்டலாக.

மேலும், “நான் பணத்துக்காக மட்டும் வேலை பார்ப்பதில்லை. என்னுடைய சினிமா கிராஃப்ட் மிகவும் முக்கியம் என நினைப்பவன் நான். நல்ல படங்களின் மூலம் பார்வையாளர்கள் மற்றும் என்னுடைய நலம் விரும்பிகளிடமிருந்து அன்பை பெறுவது மட்டுமே இதற்கான கைமாறாக இருக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE