“தக்காளி விலை உயர்வு என்னையும் பாதித்துள்ளது” - பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி

By செய்திப்பிரிவு

“நான் சூப்பர் ஸ்டார் என்பதால் தக்காளியின் விலை எங்களை பாதிக்காது என மக்கள் நினைக்கிறார்கள். அப்படியில்லை இதுபோன்ற பிரச்சினைகளை நாங்களும் எதிர்கொள்கிறோம்” என பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், “என்னுடைய மனைவி ஓரிரெண்டு நாளைக்குத் தேவையான காய்கறிகளை வாங்குவார். நாங்கள் தேவைப்படும்போது காய்கறிகளை வாங்கிக்கொள்வோம். தற்போது தக்காளியின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இது எங்கள் சமையலறையிலும் எதிரொலித்துள்ளது. அதனாலேயே நான் சமீப காலமாக தக்காளி சாப்பிடுவதை குறைத்துக்கொண்டேன். நான் சூப்பர் ஸ்டார் என்பதால் தக்காளியின் விலை எங்களை பாதிக்காது என மக்கள் நினைக்கிறார்கள். அப்படியில்லை இதுபோன்ற பிரச்சினைகளை நாங்களும் எதிர்கொள்கிறோம்” என்றார்.

மேலும், “நான் உணவு செயலிகள் மூலமாகத்தான் காய்கறிகளையும், பழங்களையும் ஆர்டர் செய்கிறேன். அவர்கள் ஃபிரஷ்ஷான காய்கறிகளை கொடுக்கிறார்கள் என்பதால் அதில் ஆர்டர் செய்கிறேன். அதன் விலையை அறிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். நான் கூட ஓர் உணவகம் வைத்து நடத்துகிறேன். சரியான விலைக்கு பேரம் பேசி பொருட்களை வாங்குவேன். ஆனால், தக்காளி விலை உயர்வால் சுவை மற்றும் தரத்தில் மக்கள் சமரசம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நானும் அதே நிலைமையில் தான் உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE