“பேரீச்சம் பழம், பால் மட்டுமே சாப்பிடவில்லை...” - ‘சாவர்க்கர்’ நாயகன் ரன்தீப் ஹூடா விளக்கம்

By செய்திப்பிரிவு

“சாவர்க்கர் கதாபாத்திரத்துக்காக உடல் எடை குறைத்தபோது நான் பேரீச்சம் பழம் மற்றும் பால் ஆகியவற்றைத் தாண்டி நிறையவே சாப்பிட்டேன்” என பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹீடோ விளக்கம் அளித்துள்ளார். மேலும், பேரீச்சம் பழம், பால் மட்டுமே சாப்பிட்டு உடல் எடை குறைத்ததாக வெளியான செய்தியையும் அவர் மறுத்துள்ளார்.

சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’. ரன்தீப் ஹூடா இயக்கி நடிக்கிறார். இப்படத்தில் சாவர்க்கர் கதாபாத்திரத்தில் நடிக்க ரன்தீப் ஹூடா 26 கிலோ எடையை குறைத்திருந்தார். “படப்பிடிப்பு முடியும்வரை நான்கு மாத காலம் தினமும் ஒரே ஒரு பேரீச்சம் பழமும், ஒரு கிளாஸ் பாலும் மட்டுமே உட்கொண்டு வந்தார்” என தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதனை மறுத்து பேசியுள்ள ரன்தீப் ஹூடா, “என் தங்கை அஞ்சலி ஹூடா தான் என்னுடைய எல்லா படங்களிலும் உடல் எடையை குறைப்பதும் கூட்டுவதற்கான மாற்றங்களில் எனக்கு உதவி புரிந்துள்ளார்.

என்னுடைய டயட்டில் நியூட்ரிஷன் குறிப்பிட்ட அளவுக்கு கீழ் செல்லாமலிருப்பது குறித்து அவர் கவனமாக இருப்பார். இருந்தாலும் இது ஒரு கடினமான பயணம். ஒருமுறை நான் குதிரையிலிருந்து மயங்கி கீழே விழுந்துவிட்டேன். அதனால், என் முழங்காலில் தீரா பிரச்சினை ஏற்பட்டது. இவையெல்லாம் நான் சொல்வதற்கு காரணம், என்னுடைய எடை குறைப்பு பயணத்தில் நான் பேரீச்சம் பழம் மற்றும் பால் மட்டும் குடித்து உடலை குறைத்தாக ஊடகங்களில் சொன்னதை பொறுப்பற்ற விஷயமாக பார்க்கிறேன்.

பேரீச்சம் பழம், பால் ஆகிவற்றைத் தாண்டி நிறையவே சாப்பிட்டேன். நான் யாருக்கும் இப்படியான தீவிர எடை குறைப்பை பரிந்துரைக்க மாட்டேன். மருத்துவரின் முறையான மேற்பார்வையின்றி தீவிர உடல் எடை குறைப்பு முறையை பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்திக்கொள்கிறேன். பட்டினியுடன் இருப்பது மரணத்தை விளைவிக்கும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “என்னுடைய படத்துக்காக சாவர்க்கரை படிக்கும்போது அவர் குறித்து நிறைய அறிந்துகொண்டேன். அவரைக் கண்டு வியக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE