‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் இயக்குநர் சுதிப்டோ சென் மற்றும் தயாரிப்பாளர் விபுல்ஷா இணையும் அடுத்தப் படத்துக்கு ‘பாஸ்டர்’ (Bastar) என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், ‘மறைக்கப்பட்ட உண்மைகள் தேசத்தை புரட்டிப்போடும்’ எனவும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, யோகிதா, சோனியா பலானி உட்பட பலர் நடித்த படம், ‘தி கேரளா ஸ்டோரி’ . இந்தியில் உருவான இந்தப் படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையைக் கொண்ட இந்தப் படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உட்பட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புக் கிளம்பியது. எதிர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இந்தப் படம் ரூ.240 கோடிக்கு மேல் வசூலித்தது. படம் திரையரங்குகளில் வெளியாகி 2 மாதங்களை நெருங்கும் நிலையில் எந்த ஓடிடி நிறுவனமும் படத்தை வாங்க முன்வரவில்லை.
இந்நிலையில், இந்தப் படத்தின் இயக்குநர் சுதிப்டோ சென் மற்றும் தயாரிப்பாளர் விபுல்ஷா இணைந்து அடுத்தப் படத்துக்கு தயாராகிவிட்டனர். ‘பாஸ்டர்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரில், ‘மறைக்கப்பட்ட உண்மைகள் தேசத்தை புரட்டிப்போடும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
» 10 நாட்கள் கடந்தும் படத்தின் பட்ஜெட்டை நெருங்க முடியாத ‘ஆதிபுருஷ்’ வசூல்
» ‘வாடிவாசல்’ படத்துக்காக ரோபோ காளை: இயக்குநர் வெற்றிமாறன் பகிர்வு
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகள் அதிக அளவில் வாழும் பகுதி ‘பாஸ்டர்’. படத்தின் அறிவிப்பு போஸ்டரில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கொடியும், மரம் சூழ்ந்த காட்டுப்பகுதியும், துப்பாக்கியும் காணப்படுவது, இப்படம் நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகளை மையப்படுத்தி உருவாக உள்ளதை உறுதி செய்கிறது.