“அன்று ‘தேவர் மகன்’... இன்று ‘மாமன்னன்’ எனக்கு முக்கியமான படம்!” - வடிவேலு

By செய்திப்பிரிவு

சென்னை: “தேவர் மகன் படத்துக்குப் பிறகு எனக்கு அமைந்த முக்கியமான படம் இது” என ‘மாமன்னன்’ படம் குறித்து நடிகர் வடிவேலு பேசியுள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா தொடங்குவதற்கு முன் நடிகர் வடிவேலு கூறும்போது, “நான் எங்கும் செல்லவில்லை. எல்லா நேரமும் உங்கள் பாக்கெட்டில் இருக்கும் செல்ஃபோனில் வந்துகொண்டுதான் இருக்கிறேன். எனக்கு கேப்-பே கிடையாது. என்னுடைய அன்பு தம்பிகள் மீம் கிரியேட்டர்ஸ்களால் நான் வந்துகொண்டுதான் இருக்கிறேன்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி தயாரிப்பில் உங்கள் வீட்டு பிள்ளை நான் இப்படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படம் எல்லோரின் வாழ்க்கையிலும் கனெக்ட் ஆகும் கதை. அருமையான கதையை உதயநிதி தேர்ந்தெடுத்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியிருக்கிறேன். நான் பாடவில்லை, அவர் தான் என்னை பாட வைத்துள்ளார்.

மறைந்த என் தாயை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். அருமையான கதைக்களம். படம் வெற்றி பெறும். ‘தேவர் மகன்’ படத்துக்குப் பிறகு எனக்கு மிகப் பெரிய படம் இது. அரசியல் படம் இது. புதுமையான படம் இது. சிறந்த குணச்சித்திர கதாபாத்திரம் எனக்கு இதில் அமைந்துள்ளது. சுயமரியாதை கலந்த கதாபாத்திரம். இது உதயநிதியின் கடைசி படம் என சொல்ல முடியாது. இவ்வளவு நாள் ஹீரோவாக நடித்தார். தற்போது அரசியலில் ஹீரோவாகப் போகிறார். மக்கள் பணியை செய்யப் போகிறார்” என்றார்.

மாரி செல்வராஜ் பேசுகையில், “எந்தப் படம் எடுத்தாலும் அதில் சமூக நீதிக்கான அரசியல் இருக்கும். ‘மாமன்னன்’ வெளியான பிறகு பெரிய அதிர்வலைகளை உருவாக்கும். புதிய வடிவேலுவை இந்தப் படத்தில் எல்லோரும் பார்ப்பார்கள்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE