எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி நீண்ட நாட்கள் காத்திருப்பில் இருந்த ‘பொம்மை’ திரைப்படம் வரும் ஜூன் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘பொம்மை’. படத்தில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்தக் கூட்டணிதான் ‘மான்ஸ்டர்’ படத்தில் இணைந்து நடித்தது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் பணிகள் கரோனா காரணமாக தள்ளிப்போய் கொண்டே இருந்ந்தது.
காதல் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதே நாள் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. பல்வேறு காரணங்களால் படம் வெளியாக தாமதமான நிலையில் தற்போது வரும் ஜூன் 16-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.